Thursday, November 08, 2018

என்னுயிர்




தீரா நதியொன்றின்,
சின்னஞ்சிறு அலை நீ..
அலை போகும் திசையில்
மிதக்கும் இலக்கில்லா படகு நான்...

நீளும் ஒற்றை பாதையில்,
தனியொரு மரமாய் நீ...
உன் நிழலில் இளைப்பாறும்
வழியறியா வழிப்போக்கன் நான்..

நீண்டதொரு  பெருங்கனவின்
சிறு வெளிச்சம் நீ..
வெளிச்சம் தேடும்
விட்டில் பூச்சியாய் நான்..

உன்னோடு நான் செல்லும் தருணமெல்லாம்,
நான் தொலைத்த நிமிடங்கள்...

என் உயிர் தேடி
நான் சென்ற பயணங்கள் எல்லாம்,
உன்னில் முடிந்து
புதிதாய் தொடங்கியதே...

காற்றில் கரையும்
உன் மொழி கூட,
என்னுள் கவிதை செலுத்தி,
காதல் சொன்னதே...

இரவின் நிலவு
சாய்ந்தும் கூட,
உன் கண்ணின் ஒளி,
என்னை சாய்க்கிறதே...

முடிவில்லா என் கனவின்
தொடக்கம் நீ..
என் கனவோடு தோன்றும்
தொடு வானம் நீ...
தொடு வானம்
தூரம் சென்றாலும்,
நான் எட்டி பிடிக்கும்
தூரத்தில் இருக்கும்
நட்சத்திரம் நீ...

புதிதாய் நானும் பிறக்கிறேன்,
ஒவ்வொரு முறையும், உன்
கண் சிமிட்டலில்
என்னை அழைக்கும் போது....
அழகாய் நீயும் சிரிக்கிறாய்,
என் அன்பில் உன்னை
கொல்லும் போது....

பெருங்கனவோடும்,
இந்த கவிதையோடும்,
உன் புன்னகையோடும்,
உன் , என் வாழ்வில்,
நம் வாழ்வை
தொடங்குவோம்...

















முதுமை

வெள்ளை முடிகளோ ,
சுருங்கிய தோல்களோ,
வளைந்த எலும்புகளோ ,
ஒளி குறைந்த கண்களோ ,
உன் முதுமையின் வலியை
தீர்மானிக்க போவதில்லை ..

மனைவியை இழந்த ,
வயதான கணவனின் வலி ....
ஆளாக்கிய பிள்ளையை இழந்த,
வயதான தாயின் வலி ....
பிள்ளைகளின் நிராகரிப்பில் ,
ஊமையாகி போன
பெற்றோரின் வலி...
அடுத்தடுத்து சக நண்பர்களின்
மரணங்களை,
வேடிக்கை மட்டும் பார்க்கும் முதுமையின் வலி...

இந்த வலிகள் தீராது போயினும் ,
வந்து சேர வேண்டிய மரணம்
வராது போயினும் ,
நீ வாழும் முதுமை கொடியதே !!!

பிரிவு



காரணம் இன்றி எவ்வுறவும் பிரிவதில்லை..

மரணம் தவிர்த்து,
நாமும் பிரிய போவதில்லை..

கங்கை வற்றினாலும்,
உயிர்கள் பிழைக்க கூடும்..

மங்கை நீ இல்லாது போனால்,
நான் வற்றி காணாது போவேன்..

நீரோடும் நதியோ,
தேரோடும் வீதியோ,
உன் பாதங்கள் படாது போனால்,
நீருமின்றி, தேருமின்றி
கலை இழந்து போகும்..

விலையின்றி எதுவுமில்லை என்பார்கள்...
நீயின்றி எதுவுமில்லை என்பேன் நான்...
மறுப்பு சொல் ஏதும் வந்தால்,
நீ என்பது நீதான் என்று எடுத்துரைப்பேன். 

நீ என்பதும் நீதான் ,
நான் என்பதும் நீதான்.
கனவும் நீதான்,
அதை மெய்ப்பட செய்பவளும் நீதான்..
அழகும் நீதான்,
அன்பும் நீதான்...
என் கண்ணீரும் நீதான்..
அதை துடைப்பவளும் நீதான்..

என்றும் நீ தான்..
உன்னை தொலைத்தால்,
தொலைபவனும் நான் தான்...

நான்

நான் என்பது இந்த உடலா...
உணர்வும் அறிவும் கலந்த மனமா...

உடலின் முதுமை,
மனதின் முதுமை..
எதை உன்னால் தடுக்க முடியும்..

எதை தடுத்தாலும் ,
இறப்பை உன்னால் தடுக்க முடியுமா..

காலம் இறவாது....
நீ இறப்பாய்...
உன் உடல் துர்நாற்றமடிக்கும் பிண்டமாகும்..
உன் மனம் இருளில் தொலைந்த நிழலாகும்...
காலம் உன்னை மறக்கடிக்க செய்யும்..
அடையாளமற்று போவாய்..

உன் அன்பின் வரலாறோ..
அல்லது வெறுப்பின் வரலாறோ...
எதுவும் காலத்தின் முன் கரைந்து போகும்...

இந்த நீண்ட நெடிய வாழ்க்கையின் பயணம் ,
இன்பத்திற்கானதா?
துன்பத்திற்கானதா?
இந்த பயணம் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்..

ஆனால் பயணத்தின் முடிவில்,
அர்த்தமற்ற முற்றுப்புள்ளியில்
மறைந்து போகிறாய்...

வாழ்க்கையே ஓர் அர்த்தமற்ற துன்பம்,
நாம் சந்திக்கும் மனிதர்களிடத்திலாவது
அன்பை தர முயற்சிப்போம்..

பிரிவு



நீரில் தெரியாது போன உன் கண்ணீர்,
என் மனதில் வழிந்தோடுவது ஏன்?

உன் நினைவில் தேயாத துன்பம்,
என்னை உருக்குவது ஏன்?

உன் கண்களின் சோகம் ,
என் இதயத்தில் தங்குவது ஏன்?

உன் கனவுகளை விரட்டும் வெளிச்சம்,
என்னை ஏன் சுடுகின்றன?

உன் மனதின் காயங்கள்,
எனக்கு ஏன் தீரா வலியை
தருகின்றன?

நீ தொடரும் மௌனங்கள்,
என் காதில் பேரிரைச்சலாய் மாறுவது ஏன்?

என் மனதின் வெறுமையெல்லாம்,
உன் கலைந்து போன கனவுகளே..

ஒளியின் தீக்கதிர் என்னை வாட்டினாலும்,
என் நிழல் உன் மீது என்றும் விழும்..

வேர்களே விலகி போனாலும்,
உன்னை நான் வீழாது தாங்குவேன்..

பேராற்றங்கரையில், என் விரல்களை தழுவி செல்லும்
நீரலை நீ..

நீ வற்றினால், என் உயிர் வாடும்,
நீ என்னை அனைத்தால்,
என் உயிர் வாழும்..


என்றும் தீரா நட்புடன்,
நான்